Monday, August 13, 2007

"எங்கள் சிங்கப்பூர்" பன்மொழி இசைவட்டு வெளியீட்டு விழா

தேசியதின விழாவைச் சார்ந்து, AI MEDIA PTE LTD தயாரிப்பில் சிங்கப்பூரின் சிறப்புகளைப் பேசும் "எங்கள் சிங்கப்பூர்" என்ற பன்மொழி இசைவட்டு வெளியீட்டு விழா, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் வாழ்த்துக்களோடு 07/08/07, செய்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இந்த இசைவட்டை இசையமைத்து தயாரித்துள்ளார் திரு.அறிவழகன்.

பாலு மீடியாவால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு கோமளவிலாஸ் உரிமையாளர் திரு.குணசேகரன் முன்னிலை வகிக்க, புதுமைத்தேனீ திரு.மா.அன்பழகன் தலைமையில் ஒலி 96.8-ன் முன்னாள் தலைவர் திரு.அழகிய பாண்டியன் சிறப்புரையாற்றினார்.

அவர் தனது உரையில் சிங்கப்பூர் நிரந்தரவாசியான இசையமைப்பாளர் திரு.அறிவழகன் தனது பாடலை தமிழ் மொழி மட்டுமில்லாமல், ஆங்கில, சீன, மலாய் மொழிகளிலும் வெளியிட்டிருப்பது சிறப்பிற்குரியது என்று குறிப்பிட்டு, இன, மொழி நல்லிணக்கத்திற்கு வழி வகுக்கும் இத்தகைய முயற்சிகள் இன்னும் நிறையத்தேவை என்று கேட்டுக் கொண்டார்.

திரு.மா.அன்பழகன் தனது தலைமையுரையில் தான் ஒரு திரைப்படத் தயாரிப்பாளராக இருந்தபோது, இசையமைப்பாளர்கள் எத்தகைய சிரமங்களை எதிர்நோக்குகிறார்கள் என்பதை உணர்ந்திருப்பதால், சீன, மலாய், தமிழ் இசைக்கூறுகளை ஒன்றிணைத்து உருவாகி இருக்கும் இந்த இசைவட்டு முயற்சியை மிகவும் பாராட்டுவதாகச் சொன்னார்.

வெஸ்டர்ன் யூனியனின் வர்த்தக நிர்வாகி திரு.பிரேம் ஆனந்த் இசைவட்டை வெளியிட, சிங்கப்பூர்த் தமிழ்ச் சங்கத்தின் பொருளாளர் திரு.செல்வராஜ் முதல் இசைவட்டைப் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து குளோபல் ·போனிக்ஸ் நிறுவன நிர்வாகி திரு.சக்தி உட்பட பலரும் இசைவட்டைப் பெற்றுக் கொண்டார்கள்.

கவிஞர் பனசை நடராஜனும், திருமதி.விஜி ஜெகதீஷ¤ம் வழிநடத்திய இந்நிகழ்ச்சியில் ஏராளமான வர்த்தகர்களும், தமிழ் ஆர்வலர்களும், சிங்கப்பூர் சின்னத்திரை நட்சத்திரங்களும் கலந்து சிறப்பித்தார்கள். சிறியோர் பெரியோர் பேதமின்றி அனைவரையும் கவர்ந்த இந்த இசைவட்டின் பாடல்கள் விரைவில் ஒலி96.8ல் ஒலிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியை வழி நடத்திய கவிஞர் பனசை நடராஜன் & திருமதி.விஜி ஜெகதீஷ்
வரவேற்புரையாற்றும் திரு. பாலு மணிமாறன்

சிறப்புரையாற்றிய திரு.அழகிய பாண்டியன்


தலைமையுரையாற்றிய திரு.மா.அன்பழகன்


நன்றியுரையாற்றும் இசையமைப்பாளர் திரு.அறிவழகன்


வெஸ்டர்ன் யூனியனின் திரு.பிரேம் ஆனந்த் இசைவட்டை வெளியிட, சிங்கைத் தமிழ்ச் சங்கத்தின் திரு.செல்வராஜ் முதல் இசை வட்டை பெற்றுக் கொள்கிறார்


முன்னிலை வகித்த கோமளவிலாஸ் உரிமையாளர் திரு. குணசேகரன் இசைவட்டைப் பெற்று வாழ்த்தும் காட்சி

2004ன் மிஸ்.வசந்தம் ஷோபனாவும் அவரது தாயாரும்

நிகழ்ச்சிக்கு வந்திருந்த கூட்டத்தில் ஒரு பகுதி

0 comments: